Wednesday, May 27, 2009

தினம் ஒரு தகவல் - கல்விச் சேவை

என்றும் செய்வதிலே சிறந்த சேவை கல்விச் சேவை..
சேர்ந்தே செய்திட இப்போ கரங்கள் தேவை..
வாரி வழங்கிட வள்ளல் கரங்கள் தேவை..
தேராய் அறிவை இழுத்திட திறன் தோள்கள் தேவை..
தோணிகளாய் கல்விக் கடலில் கரை சேர்த்திட நீங்கள் தேவை..
ஏணிகளாய் ஏற்றம் கொண்டோர் எம்மிடம் இணையத் தேவை..
படிக்காதவர் இருக்கலாகாது என்றோர் சட்டம் தேவை..
இடித்துச் சொல்லி நிறைவேற்றிட மெத்தப் படித்தவர் தேவை..
கல்விப் பணிகள் செய்திட இன்னும் கற்றோர்கள் தேவை..
வெல்லும் படிப்பாக வேதனைகள் தீர்ந்திடத் தேவை..
கல்தேய்ந்திடும் எறும்பனைய கற்றவர் கூட்டம் தேவை..
சொல்லும் உயிர்ச் சொல்லாக தமிழன் உயர்ந்திடத் தேவை.. இராதாகிருட்டினக் கல்விக்கூடம் இன்னும் மலர்ந்திடத் தேவை..
இரங்கும் மனங்கள் இன்னும் அள்ளிக் கொடுத்திடத் தேவை..
இறைவனின் ஆணை என நீங்கள் இணைந்திடத் தேவை..
இன்பத் தமிழனை எங்கும் உயர்த்திட நீங்கள் என்றும் தேவை!
வாருங்கள்.. இணையுங்கள்..
கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்..
என்று அனைவருக்கும் அறைகூவல் இடவும்.. அன்புத்தோழரே.. ஆனந்தரே
அன்புள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாதென்பதால் கடல் கடந்த தூரத்தில் இருந்து கொண்டே நமது தினம் ஒரு தகவலின் மூலம் அவர் கைகளை என்னோடு இணைத்து தங்கத்தமிழில் இசை பாடி ஓசை எழுப்பியுள்ளார் முனைவர் பாலு, அறிவியல் விஞ்ஞானி மற்றும் சிட்னி தமிழ் மன்றச் செயலாளர் ஐயா அவர்கள், ஆஸ்திரேலியா. ஓசையின் இனிமையோடு உங்க‌ள் அனைவ‌ரையும் இன்று ச‌ந்திப்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சியடைகிறேன். ந‌ம்மால் முடியும் ந‌ம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளை க‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாற்றிட. வாருங்கள்.. இணையுங்கள்.. கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்..

No comments:

Post a Comment