Wednesday, June 3, 2009

தினம் ஒரு தகவல் - இரவு நேரம்!

என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!

Tuesday, June 2, 2009

தினம் ஒரு தகவல் - எண்ணியதை அடைதல்

கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்

தினம் ஒரு தகவல் - பாத்திரம் அறிதல்

உதவி வேண்டும் என்று மகாராஜாவிடம் யாசகம் கேட்க ஒரு ஞானி போனார். அவர் பிராத்தனையில் இருப்பதாகவும் ஞானி மட்டும் உள்ளே போகலாம் என்றும் அனுமதி தந்தார்கள். அரசர் “ஆண்டவரே… என் தேவைகள் பெருகி விட்டன. இன்னும் பொன்னும் மணியும் நாடும் கொடு” என்று பிராத்தனையைய் முடித்தார். உதவி கேட்டு வந்த ஞானி விருட்டென்று அரசரிடம் எதையும் கேட்காமல் வெளியே புறப்பட்டார். அரசர், “சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றபடி பின்னால் வந்தார். “வேண்டாம்… நீயே பிச்சைக்காரன்… உன்னிடம் நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நேராகக் கடவுளிடமே பிச்சை கேட்டுக் கொள்வேன்” என்றபடி வேகமாகப் போய்விட்டார்.

கடவுள் மேல் பாரத்தைக் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது. இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தைவிட உயர்வாகவே இருக்கும்.